கள் விற்பனை தடையை மறுபரிசீலனை செய்க - ஐகோர்ட் உத்தரவு..
தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை ஏன் அரசு மறுபரிசீலனை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் கள் விற்பனை குறித்து பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தனது மனுவில், டாஸ்மாக்கில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் மதுபானங்கள் விற்கப்படுவதாகவும், ஆனால் குறிப்பிட்ட சில வகை மதுபானங்கள் மட்டுமே கிடைப்பதகாவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக் பணம் வசூலிக்கப்படுவதாகவும், மதுபானங்களை ரேஷன் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் கள் விற்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் தனது மனுவில் முன்வைத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , மதுபானங்களை ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் யாரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக்க்கூடாது என கேள்வியெழுப்பினர். மேலும் இது தொடர்பாக ஜூலை 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.