மறந்துவிட்டதா மிஸ்டர் நிர்மல்..? 2017-ல் டிடிவி வீட்டை சுற்றி வந்தது யாரு? அமைச்சர் நிர்மல்குமாருக்கு அமமுக ஐடி விங் பதிலடி!
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார்,
அதிமுகவை காலி செய்தது எடப்பாடி பழனிசாமி தான். திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தனர். திமுகவுக்கு எதிராக நிற்கக்கூடிய கட்சி தவெக. டிடிவி தினகரன் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர் அரசியலை விட்டு ஒதுங்கி கொள்ள வேண்டும்.எடப்பாடி பழனிசாமியுடன் சேர்வதற்குப் பதிலாக தூக்கு மாட்டி தொங்கிடுவேன் என்று கூறிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், இன்று அவருடன் நிற்கிறார் என விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், அமைச்சர் நிர்மல்குமாரின் இந்த விமர்சனத்துக்கு அமமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ' 2017ல் பாஜகவில் இருந்து கொண்டே, அதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த அண்ணன் டிடிவியின் குட்புக்கில் இடம்பிடிக்க வேண்டும், பார்வையில் பட வேண்டுமென அவர் வீட்டை சுற்றி வந்ததெல்லாம் நிர்மல்குமாருக்கு மறந்து போயிருக்கலாம், அதை நினைவு படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. ஆர்.கே நகர் சட்டமன்ற தேர்தலிலும், டிடிவியின் பார்வை படாதா என பம்மியது எல்லாம் மறந்துவிட்டதா மிஸ்டர் நிர்மல்?
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கூட, அமமுகவை தவெக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என வரிசைக்கட்டி தூது வந்தவகளின் பட்டியலை வெளியிடட்டுமா? அப்போதெல்லாம் அண்ணன் டிடிவி அரசியலில் இயங்கியது இனித்தது, இன்று இந்த அரசின் கையாலாகாதனத்தை சுட்டிக் காட்டியதும் கோபம் வருகிறதா?
அதிர்ஷ்ட காற்றில் கோபுர உச்சியில் ஒட்டிக்கொண்ட சருகுகளுக்கு எல்லாம் இவ்வளவு தலைக்கணம் தேவையில்லை, காற்றின் வேகம் குறைந்தால் சருகுகள் காணாமல் போகும்' என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.