×

சீமானுக்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமியை மிரட்டிய வழக்கு- வசமாக சிக்கும் ஹரிநாடார் 

 

பெங்களூர் சிறையில் இருக்கும் ஹரி நாடாரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருவான்மியூர் போலீசார் முனைப்பு காட்டிவருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டார் என தொடர்ந்து சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருபவர் நடிகை விஜயலட்சுமி. கடந்த 2020ஆம் ஆண்டு சீமானுக்கு ஆதரவாக பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் மற்றும் சதா நாடார் ஆகியோர் நடிகை விஜயலட்சுமியை செல்போன் மூலமாகவும் சமூக வலைதளங்களிலும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு மிரட்டினர்.

இதையடுத்து நடிகை விஜயலட்சுமி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் திருவான்மியூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ஹரிநாடார் தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இந்நிலையில், நடிகை விஜயலட்சுமியை மிரட்டிய வழக்கில் ஹரி நாடாரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும், 
இதற்காக டிரான்சிட் வாரண்ட் வழங்க வேண்டும் என சென்னை திருவான்மியூர் போலீஸ் சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் ஓரிரு நாட்களில் ஹரிநாடாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் திருவான்மியூர் போலீசார் தெரிவித்தனர்.