×

பிரசவ வலியுடன் வந்த பெண்ணை அலைக்கழித்த அரசு மருத்துவமனை.. திருசெந்தூரில் நடந்த கொடுமை..

 

மத்திய அரசு விருது பெற்ற திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

திருச்செந்தூர் அருகே உள்ள குமரிக்காட்டை சேர்ந்தவர் துர்கா.  22 வயதான துர்கா நிறைமாத கர்ப்பத்துடன் பிரசவத்திற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.  அப்போது துர்காவை தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்துவிட்டு வரும்படி,  மருத்துவர் சியாமளா தெரிவித்திருக்கிறார்.  அதன் பெயரில் துர்காவும்  பிரசவ வலியுடன் தனியார் ஸ்கேன் செண்டருக்குச் சென்று  ஸ்கேன்  எடுத்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். பின்னர் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்  இன்னும் ஒரு மணி நேரத்தில்  குழந்தை பிறந்து விடும் என்றும்,   அதற்குள் தூத்துக்குடி மருத்துவமனைக்குச்  செல்லுமாறும்  தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

அத்துடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஏதாவது நேர்ந்தால் அதற்கு மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் பொறுப்பல்ல என்று எழுதிக் கொடுத்து விட்டு செல்லும்படி கூறி இருக்கின்றனர். பிரசவ வலியுடன் இருந்த துர்காவும் அதன்பேரில் மருத்துவமனையில் இருந்து வெளியேறி ஆட்டோ மூலம் தனியார் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.  இந்த சம்பவம்  அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஒரு மணி நேரத்தில் குழந்தை பிறக்கும் என சொல்லிவிட்டு தூத்துக்குடி செல்ல வேண்டும் என்றால்,  செல்லும் வழியில் ஏதாவது நேர்ந்துவிட்டால்  என்ன செய்ய முடியும் என்கிற அச்சத்துடனேயே அவரது உறவினர்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  

நிறைமாத கர்ப்பிணிக்கு உரிய சிகிச்சை அளிக்காத மற்றும்  அந்தப்பெண் தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக உரிய ஆம்புலன்ஸ் வசதியையும் செய்து கொடுக்காத மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை தரமாக கையாளும் மருத்துவமனைகான  மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.