×

பயணியை ஆபாச வார்த்தைகளால் திட்டிய அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ..!!

 

மதுரை மாநகரில் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்த கைகாட்டிய பயணியை அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் ஆபாசமாக திட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாநகர பகுதிகளில் மதுரை மண்டல போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏராளமான புதிய தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்த பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை முறையாக நிறுத்தி அழைத்துச் செல்வதில்லை என  மாற்றுத்திறனாளிகள் புகார்களை தெரிவித்துவருகின்றனர்.  இந்த நிலையில் மதுரை மாநகர் மூன்று மாவடி பகுதியில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அந்த வழியாக அழகர் கோவில் செல்லும் அரசுப்பேருந்தை நிறுத்துமாறு கையை நீட்டி நிறுத்தியுள்ளார். 

அப்போது பேருந்து நிறுத்தத்தின் அருகே சிக்னலில் பச்சை நிற விளக்கு எரிந்து கொண்டிருந்ததால்,   அருகே பேருந்து நிற்காமல் சிக்னலை கடந்து செல்ல முயன்றது.  அப்போதும் பேருந்து நிறுத்த மீண்டும் கை நீட்டியதால் இளைஞருக்கும் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .  அப்போது அரசு பேருந்து நடத்துனர் இளைஞரிடம் எதற்காக சிக்னல் அருகே பேருந்தை நிறுத்துகிறாய்,  கொஞ்சம் தள்ளி நிற்கமாட்டாயா? என வசைபாட தொடங்கிய நிலையில், நான் பேருந்து நிறுத்தத்தில் தான் நிற்கிறேன் என  இளைஞர் பதில் அளித்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. 

அப்போது அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பயணியிடம் ‘குருட்டு பயலே’ என்றும், மேலும் ஆபாசமான வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு மதுரை மண்டலத்தில் பணியாற்றிய மண்டல போக்குவரத்து கழக மேலாளர்,  நடத்துனரை காலணியால்  அடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தற்போது  அரசுப் பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்திய பயணியை திட்டிய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.