×

ஐஐடி தேர்வில் வென்ற மாணவனின் கட்டணத்தை அரசே ஏற்கும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
 

 


அரசு பள்ளியில் படித்து ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற அருண்குமார் என்ற மாணவரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னழகன் - பூவாத்தாள் தம்பதியின் மகன் அருண்குமார். செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற இவர், ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வை எழுதினார். அந்தத் தேர்வில் அவர் வெற்றி பெற்ற நிலையில் மாணவர் அருண்குமாரை நேரில் அழைத்து முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டினார்.

அரசு பள்ளியில் பயின்று ஹைதராபாத் ஐஐடியில் படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்ற அருண்குமாரின் மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதற்கான அறிவிப்பை செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.