×

100 நாட்களில் மாற்றத்தை நோக்கி நகரும் கவுண்டம்பாளையம் தொகுதி – மக்கள் பணியின் செயல்பாடுகளை பட்டியலிட்ட MLA கனிமொழி சந்தோஷ்..!! 

 

கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 100 நாட்களில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைப் பெற்று, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து தீர்வு காணும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றை மனுக்களாகப் பெற்று, ஒவ்வொரு கோரிக்கையின் மீதும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 100 நாட்களில் 30000 -க்கும் மேற்பட்ட பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டுள்ளன.

இதுவரை 1,317 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 953 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது 72.36 சதவீத தீர்வு விகிதமாகும். மேலும், 364 மனுக்கள் தொடர்ந்து நடவடிக்கையில் உள்ளன.

பொதுமக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்து தீர்வு காணும் நோக்கில் 323 இடங்களில் நேரடி கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளுடன் 4 ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை

மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடிநீர் தொடர்பான 248 கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் மற்றும் சாக்கடை தொடர்பான 232 நடவடிக்கைகளும், தூய்மை மற்றும் மின்சாரப் பிரச்சினைகள் தொடர்பாக 189 நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், 146 சுகாதார நடவடிக்கைகள், 23 பள்ளி மற்றும் கல்லூரி தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனை, பேருந்து மற்றும் போக்குவரத்து வசதிகள், பட்டா மற்றும் நிலம் தொடர்பான கோரிக்கைகள், ஆக்கிரமிப்பு மற்றும் அரசு நிலம் தொடர்பான நடவடிக்கைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் தொடர்பான உதவிகள் என மொத்தம் 115 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

₹1.83 கோடி மதிப்பில் பணிகள்

கடந்த 100 நாட்களில் இதுவரை ₹1.83 கோடி மதிப்பிலான பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தொகுதியில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் மொத்த மதிப்பு ₹3.20 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையான நிர்வாகம் – லஞ்சமற்ற அரசு சேவை

மக்களின் கோரிக்கைகள் மனுக்களாகப் பெறப்பட்டு, அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதன் மூலம் வெளிப்படையான மக்கள் மைய நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்பதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும்.

 பசுமை கவுண்டம்பாளையம் – இளைஞர்களுக்கான KGF

சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி “பசுமை கவுண்டம்பாளையம்” திட்டத்தின் மூலம் மரநடுதல், தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இளைஞர்களை நிர்வாகத்துடன் இணைக்கும் நோக்கில் KGF – Intern with MLA (Kavundampalayam Governance Fellowship) திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு களப்பணி, அரசு நிர்வாகம் மற்றும் தலைமைத்துவம் குறித்த நேரடி அனுபவம் கிடைக்கும் வகையில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.