குட் நியூஸ்.. இனி 40 வயது வரை கல்லூரிகளில் சேரலாம்..!
தமிழ்நாட்டில் மொத்தம் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிகள் உள்ளன. இவற்றில் உள்ள இடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் பெறப்பட்டு, நிரப்பப்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு கல்வியை முடித்தவர்கள் உயர்கல்வியில் இளங்கலை பட்டப்படிப்புகளில் (BA, B.Sc, B.Com, BBA) சேரலாம்.
2025-26 கல்வி ஆண்டில் உயர்கல்வியில் சேர விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. சுமார் 7.53 லட்சம் பேர் மாநில கல்வித்திட்டத்தில் இந்தாண்டு பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவைமட்டுமின்றி, இதர பாடத்திட்டங்களும் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்கு தகுதிப் பெற்றனர்,ஏராளமானவர்களுக்கு இடங்கள் கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்கள் உயர்த்தப்பட்டது. அவைமட்டுமின்றி அரசு உதவி பெறும் கல்லூரியில் 15 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் 10 சதவீத இடங்களும் என சுமார் 15,000 இடங்கள் இந்த கல்வி ஆண்டில் புதிதாக உருவாக்கபப்ட்டன.
மேலும், மாணவர்களின் நலன் கருதி புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, இந்த கல்வி ஆண்டில் சேர்க்கை நடைபெற்றது. நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய பாடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் இளங்கலை பட்டப்படிப்பின் சேர்க்கைக்கான அதிகபடியான வயது வரம்பு 21 ஆக இருந்ததது. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 3 ஆண்டுகள் வரை தளர்வு இருந்தது. மாணவர்கள் நலன் கருதி வயது வரம்பின் உச்ச வரம்பை 40 ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்று, கல்லூரி கல்வி ஆணையரின் கருத்துருவை ஆய்வு செய்து தற்போது வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2025-26 கல்வி ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் அதிகபடியாக 40 வயது வரை சேரலாம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் 5 வருடங்கள், அதாவது 45 வயது வரையும், எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு 3 ஆண்டுகள், அதாவது 43 வயது வரையும் உயர்த்தி அதிகரிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை உயர்கல்வித் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு உயர்வு
| பிரிவு | வயது |
| பொதுப்பிரிவு | 40 |
| மாற்றுத்திறனாளிகள் | 45 |
| எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் | 43 |
இதனால் இந்த கல்வி ஆண்டு முதல் வயது வரம்பு காரணத்தினால் கல்லூரியை தொடர முடியாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு, உயர்கல்வியில் சேரலாம். அரசு கல்லூரிகள் ஊக்கத்தொகைகளுடன் சேர்ந்து படிக்கும் வாய்ப்பைப் பெறலாம்.