×

அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..! விரைவில் குத்தம்பாக்கம் புது பஸ் ஸ்டான்ட் திறப்பு..! 

 

கோயம்பேடு பேருந்து முனையத்தில் இருந்து தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்ட நிலையில், பேருந்து முனையம் கிளாம்பாக்கத்திற்கு 2024 ஜனவரி முதல் மாற்றப்பட்டது. இதனால் வெளி மாவட்டங்கள் செல்லும் பயணிகள் கிளாம்பாக்கத்திற்குச் சென்று பேருந்து ஏறிச் செல்கின்றனர். கிளாம்பாக்கத்தில் இருந்து 90 சதவிகிதம் பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து பத்து சதவிகித பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல பல இடங்களில் பேருந்து முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

வட மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக சென்னை பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கத்தில் ரூ.414 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதில் சுமார் 200 பேருந்துகள் வரை நிறுத்தும் வகையில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.

மேலும் 1800 இருசக்கர வாகனங்கள், 250 கார்கள் நிறுத்தும் வசதியுடன், குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறையுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பேருந்து நிலையம் உள்ளே போர்டுகள், டிஜிட்டல் ஸ்க்ரீன் வைக்கும் பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை சிஎம்டிஏ துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சேகர்பாபு நேற்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேருந்து நிலையத்தில் கடைகள், பார்க்கிங் பகுதி, பேருந்து நிறுத்தும் இடம் என ஒவ்வொன்றாக பார்வையிட்டு பல்வேறு மாற்றங்களை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பேருந்து நிலையத்தில் பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆகவே, பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்து வருகிறோம். பருவமழை தாக்கம் இந்த வருடம் பெரியளவில் இல்லை என்றால் நிச்சயம் வரும் நவம்பர் மாதத்திற்குள் பேருந்து முனையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடுவோம்” என்று தெரிவித்தார்.