சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: நாளை முதல் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்..!
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''வரும் டிசம்பர் 23 (செவ்வாய்கிழமை), 24 (புதன் கிழமை) மற்றும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்தும், பிற முக்கிய இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வருகிற டிசம்பர் 23 (செவ்வாய்கிழமை) 255 பேருந்துகளும், டிசம்பர் 24 (புதன் கிழமை) 525 பேருந்துகளையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேப் போன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வரும் டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மொத்தம் 91 பேருந்துகளை மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மாதவரத்தில் இருந்து 23/12/2025 மற்றும் 24/12/2025 ஆகிய தேதிகளில், மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரத்தில் வரும் டிசம்பர் 23 (செவ்வாய்கிழமை) 20,107 பயணிகளும், டிசம்பர் 24 (புதன்கிழமை) 21,206 பயணிகளும், டிசம்பர் 26 (வெள்ளிக்கிழமை) 7,578 பயணிகளும், டிசம்பர் 27 சனிக்கிழமை 5,972 பயணிகளும் மற்றும் டிசம்பர் 28 ஞாயிறு 14,256 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்டம் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களுடைய பயணத்தை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது'' என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.