தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ்..! இன்று காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இந்ததிட்டம், இன்று (வருகிற 9-ந் தேதி- திங்கட்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது.
இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். கோவை மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 100 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். நிரந்தர, தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வார்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 454 பணியாளர்கள் பயன்பெற உள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் ஒவ்வொரு நாளும் காலையில் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.