×

குட் நியூஸ்..! மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்கான வட்டி முழுவதுமாக தள்ளுபடி..! 

 

தமிழக அரசு பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உரிய முறையில் கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டியானது தள்ளுபடி செய்யப்படும். இந்த நிலையில், வீட்டு வசதி வாரியத்தில் மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்கான அபராத வட்டி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், க.க.நகர் கோட்டத்திற்குட்பட்ட அரும்பாக்கம், கே.கே.நகர், மதுரவாயல், அசோக்நகர், MTB Scheme, இராஜாஅண்ணாமலைபுரம். விசாலாட்சி தோட்டம், மாந்தோப்பு காலனி, 428-புலியூர், பழைய இராமாபுரம். CIT நகர் மேற்கு ஆகிய திட்டப்பகுதிகளில் தவணை முறையில் ஒதுக்கீடு பெற்றுள்ள ஒதுக்கீடுதாரர்களில் தமிழக அரசாணை நிலை எண்.116 வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள்: 04.08.2025-ன்படி நிலுவைத் தொகையை செலுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி சலுகை அறிவித்துள்ளது. அதில் ஒதுக்கீடு பெற்ற மனை, வீடு (ம) அடுக்குமாடி குடியிருப்பிற்கான மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்கான அபராத வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்தும் வட்டி முதலாக்கத்திற்காக விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்தும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியினை வருடத்திற்கு 5 மாத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இச்சலுகை 31.03.2026 வரை செயல்படுத்தப்படும்.

ஆகவே, க.க.நகர் கோட்டத்திற்குட்பட்ட மேற்கூரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற 31.03.2015-க்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்றும் நிலுவை தொகையினை செலுத்தாமல் உள்ள ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நிலுவைத் தொகையினை முழுவதையும் ஒரே தவணையாக செலுத்தி வாரிய விதிகளின்படி கிரையப்பத்திரம் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த வட்டி சலுகை திட்டம் தொடர்பாக கூடுதல் தகவல்களுக்கு இந்த தொடர்பு எண். 9444769154 கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.