குட் நியூஸ்..! இலங்கைக்கு கப்பல் பயண கட்டணம் அதிரடியாக குறைப்பு..!
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேஷம் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் பயண கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவனத் தலைவர் நாகையில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் நாகையில் இருந்து காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இரு நாட்டிலும் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் கப்பல் பயணிகளுக்கு உதவிடும் வகையில் தற்போதைய கட்டணம் ரூ. 8,500ல் இருந்து 8000 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் பயணிகள் தங்களது உடைமைகளாக 10 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை ஏழு கிலோ ஹேண்ட் பேக் எடையாகவும், 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க உள்ளோம்.
இது தவிர ரூ.15,000க்கு இரண்டு இரவு பயணம் உட்பட மூன்று நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம், ரூ.30,000-க்கு 5 இரவுகள் 6 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பேக்கேஜ் மூலம் ராமர் பாலத்தை நேரடியாகப் பார்வையிடவும், அதில் நடந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேக்கேஜ் திட்டத்தில் இரு வழி பயண கட்டணம், தங்கும் வசதி ,போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்படும் என்றார்.