தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை.. நகைக்கடைகளில் குவியும் மக்கள்..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்திய பிறகு தங்கத்தின் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. எனினும், நகை விலை சற்று சரிவை சந்தித்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அடுத்த சில நாட்களே மீண்டும் இருமடங்காக விலையேற்றம் கண்டுவிடுகிறது. அந்தவகையில் இம்மாத தொடக்கத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை, கடந்த வாரம் சற்று ஏற்றுத்துடன் விற்பனையானது.
பின்னர் மீண்டும் தங்கம் விலை இறங்குமுகம் காட்டியது. இதனால் நகை வாங்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். குறிப்பாக கடந்த சனிக்கிழமை அன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனு ரூ.224 குறைந்து ரூ.37,920-க்கும் விற்கப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுமட்டுமின்றி இந்த வாரம் தங்கம் விலை சரிவுடனேயே தொடங்கியிருக்கிறது. அதன்படி நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரன் ரூ.160 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த தொடர் விலை சரிவால் தங்கம் வாங்க நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,608-க்கும், கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4,701-க்கும் விற்பனையாகிறது. மேலும் சென்னையில் வெள்ளி விலையும் குறைந்திருக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.61.80-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.61,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.