உலகை அழிக்கும் முடிவை கடவுள் ஒத்திவைத்திருக்கிறார் - அந்தர் பல்டி அடித்த தீர்க்கதரிசி..!!
கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா என்பவர் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக அறிவித்து கொண்டார். இவர் சாக்கு துணியில் செய்யப்பட்ட ஆடையை அணிந்து இருக்கிறார். அது கிழிந்து தொங்கும் நிலையில் உள்ளது. சில சமயங்களில் அவர் கூறிய விசயங்கள் ஏறக்குறைய நடந்துள்ளன என கூறப்படுகிறது. இதனால், அவருக்கான சீடர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் டிசம்பர் 25-ந்தேதி (கிறிஸ்துமஸ் தினத்தில்) உலகம் அழிய போகிறது என கூறி வந்த அவர், அதற்காக மக்களை காக்கும் வகையில் நோவா பேழைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக அவருடைய பின்தொடர்பவர்கள் தங்களுடைய சொத்துகளை எல்லாம் விற்று அதில் கிடைத்த தொகையை அவருக்கு கொடுத்து உதவியுள்ளனர்.
இந்த பேழைகள் 3 ஆண்டுகள் வரை வெள்ளத்தில் இருந்து காக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு பெருவெள்ளம் வரும் என்றும் அதன் மூலம் உலகம் முடிவுக்கு வரும் என்றும் அதனை கடவுள் செய்வார் என்ற ரீதியில் அவர் கூறினார். எனினும், பூமியை அழிக்க மீண்டும் பெருவெள்ளம் ஏற்படாது என வேதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், நாங்கள் கடவுளின் இரக்கத்திற்காக வேண்டி கொள்கிறோம். ஆனால், கடவுள் அமைதியாக இருந்து வருகிறார். நிறுத்து... என அவருடைய குரல் கேட்கும் வரை பேழையை கட்டி வருகிறேன். இறைவழிபாட்டுடன் எனக்கு ஆதரவு அளியுங்கள் என்றும் அவர் கூறினார். அவரை தேடி சீடர்கள் குவிந்து வருகின்றனர். மூட்டையை கட்டிக்கொண்டு, குடும்பத்துடன் கிளம்பி பேரணியாக அவரை நோக்கி சென்றனர். கூட கால்நடைகளையும் திரட்டி கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத சம்பவம் இன்று நடந்தது. என்னுடைய வேண்டுதலை கடவுள் ஏற்று கொண்டிருக்கிறார். அதனால் உலகை அழிக்கும் முடிவை கடவுள் ஒத்திவைத்திருக்கிறார்.
அதனால், தொடர்ந்து இன்னும் பல பேழைகளை கட்ட போகிறேன். அதற்கு எனக்கு கடவுள் போதிய நேரம் கொடுத்திருக்கிறார் என்று கூறிய அவர், நோவாவை தேடி வந்த மக்களிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். மகிழ்ச்சியாய் இருங்கள் என கூறினார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. அவர் கடந்த 3 ஆண்டுகளாக பேழையை கட்டி வருகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.