×

காரில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்- ஒருவர் கைது 

 

காரில் அழைத்து  சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாகச் சென்ற காரில் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சாலையில் இலங்கை தூதரகம் அமைந்திருப்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த, காவலர் தேவசகாயம்  அந்த காரை மடக்கி நிறுத்தியுள்ளார். காரை சோதனை செய்தபோது, காரில் இருந்த இளம் பெண் ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டே தனது செருப்பை எடுத்து உடனிருந்த இளைஞர்களை ஆவேசமாக அடித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து காவலர் தேவசகாயம் இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்றா நுங்கம்பாக்கம் போலீசார் காரில் இளம் பெண்ணுடன் வந்த இளைஞர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்த மென் பொறியாளரான 23 வயதான இளம் பெண் போரூரில் தங்கி பணி புரிந்து வருவதும், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்றிரவு நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில்  கலந்து கொண்டதும் தெரியவந்தது. 

அப்போது விடுதியில் அறிமுகமான 3 பேர் இளம் பெண்ணுக்கு பழக்கமாகி நட்பாகப் பேசியுள்ளனர்.  அனைவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் இளம் பெண் தங்கியிருக்கும் அறையில் கொண்டு சென்று விடுவதாக 3 இளைஞர்களும் கூறியதை நம்பி இளம் பெண் அவர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண்ணிடம் காரில் வைத்து 3 இளைஞர்களும் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் காருக்குள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்தார்.  3 இளைஞர்களும் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் காரை ஓட்டி வந்த கவுதமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவருடைய நண்பர்களான தீபக், சக்தி ததலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்