×

"சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த" ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாப பலி!
 

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும்,  கிரிஷ் என்ற 5 வயது மகனும், ஒன்றரை வயது  கிருபாஸ்ரீ  என்ற மகளும் உள்ளனர்.  தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வரும் மணிகண்டன், கடந்த 26-ம் தேதி மனைவி தனலட்சுமியிடம் தனக்கும், வயல்வெளியில் வேலை செய்பவர்களுக்கும் சேர்த்து மதிய உணவு தயார் செய்ய கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து பெரிய பாத்திரத்தில் மதிய உணவு தயாரித்த தனலட்சுமி பெரிய பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க சாம்பார் செய்து சமையல் அறையில் வைத்துள்ளார்.  பின்னர் குழந்தைக்கு உணவு கொடுக்க, தாய் தனலட்சுமி சமையல் அறைக்கு செல்ல, குழந்தை  கிருபாஸ்ரீ தாயின் பின்னால் சென்றுள்ளது. அப்போது  எதிர்பாராத விதமாக குழந்தை  கிருபாஸ்ரீ சாம்பார் வைத்திருந்த பாத்திரத்திற்குள் தவறி விழுந்தது. இதில் குழந்தையின் உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து குழந்தை கிருபாஸ்ரீ சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,   குழந்தை  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.