×

வேலை தராததால் விரக்தி- உணவகம் முன் தீக்குளித்த வாலிபர்

 

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வேலை தராத விரக்தியில், உணவகம் முன்பு‌‌ தனது‌ உடலில்  தீ வைத்து கொண்டு கடையை நோக்கி ஒடி சென்ற சென்னை வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.


புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது தனியார்  உணவகம். இந்த உணவகத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பணியாற்றியவர் சென்னையில் சேர்ந்த வெங்கடேஷன். இவர் உணவகத்தில் பணியாற்றுக் கொண்டிருந்த போது, தவறான நடவடிக்கை காரணமாக நிர்வாகம் அவரை கண்டித்து வேலை விட்டு நிறுத்தி உள்ளது. இதனால் ஐந்து மாதமாக வேலையில்லாமல் இருந்தவர், கடந்த இரண்டு மாதங்களாக தினந்தோறும் வந்து வேலை கேட்டுள்ளார். மேலும் நிர்வாகத்துடன் அடிக்கடி தகராறு செய்து உள்ளார். இதனால் வேலை வழங்காமல் இருந்த நிலையில் இன்று  திடீரென உணவகத்தின் எதிரே விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள  தடுப்பு கட்டை மீது ஏறி நின்று கொண்டு மீண்டும் வேலை கேட்டார். அப்போது தனது கையில் பெட்ரோல் வைத்து கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் யாரும் கண்டு கொள்ளாத நிலையில், திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்ட நிலையில் உணவகத்தை நோக்கி ஓடி வந்துள்ளார். அப்போது உணவகத்தில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தனர். 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த, ரெட்டியார்பாளையம் போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை வழங்க வேண்டும் என மிரட்டல் விடுத்து தன்னைத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.