இன்று முதல் அமல் : இனி இந்த நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்..!
சென்னை மாநகராட்சிக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாய்கள் கடித்து பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிட்புல், ராட்வைலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்க கூடாது. இன்று முதல் ராட்வைலர், பிட்புல் ரக நாய்களுக்கு உரிமை பெற விண்ணப்பிப்பதற்கும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ராட்வீலர், பிட்புல் நாய்கள் இனங்களை வைத்திருப்பவர்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அனைவரும் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
அதேசமயம் ஏற்கனவே உரிமம் பெற்ற ராட்வீலர், பிட்புல் வகை நாய்களை வெளியில் அழைத்துச் செல்லும் போது கழுத்து பட்டை மற்றும் வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை பின்பற்றாத நாய் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கழிவறையுடன் கூடிய ஓய்வறைகள் 200 வார்டுகளிலும் ஏற்படுத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.