×

இனிமேல்  கட்அவுட், பேனர் வைத்தால்...  திமுகவினருக்கு தலைமை எச்சரிக்கை

 

இனிமேல் கட் அவுட், பேனர், பிளக்ஸ் போர்டு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவினருக்கு கட்சியின் தலைமை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆளுங் கட்சியினரின் கட்டமைப்பு கலாச்சாரம் குறித்து அதிக விமர்சனம் எழுந்த நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

 இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,   கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த அதிமுக ஆட்சியில் பேனர்- கட்அவுட் கலாச்சாரத்தின் காரணமாக சென்னையிலும், கோவையிலும் இரண்டு பேர் உயிரிழந்த போது திமுக பொதுக்கூட்டங்கள் நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கின்ற வகையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்ற விதத்திலும் கட் அவுட்டுகள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று நிர்வாகிகள் அனைவருக்கும் அறிவுறுத்தி இருந்தேன். 

 இதை மீறி வைக்கும் கழக நிர்வாகிகள் தோழர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் ஸ்டாலின் 13. 9 .2019ல் அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இந்த அறிக்கை வெளிவந்த நாள் முதல் கழக நிர்வாகிகள், தோழர்கள் பெரும்பாலானோர் அதை பின்பற்றுகின்றனர்.  இதற்கு மாறாக பேனர் வைத்த கழக நிர்வாகிகள் மீது தலைமை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

 தற்போது ஒரு சிலர்,  தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்னும்  கழக முன்னோடிகள் பங்கேற்கும் பொது கூட்டம்,  ற நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் முகம் சுளிக்கும் வண்ணம் கட் அவுட்,  பேனர்,  பிளக்ஸ் போர்டு வைப்பதாக தலைமைச் காலகட்டத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறது.  இனிமேல் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று பாதுகாப்பாக வையுங்கள்.   மற்றபடி சாலை , தெரு நெடுகிலும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் மக்களுக்கும் பேரிடர் ஏற்படுகின்ற வகையில் வைக்கக்கூடாது.   இதை யாரேனும் மீறியதாக தலைமைக்கு கழகத்தின் கவனத்திற்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.