மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவசமாக நாப்கின் வழங்க வேண்டும்: சுப்ரீம்கோர்ட் உத்தரவு..!
மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தக் கோரி, ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:
* நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள பள்ளிகளில் பெண், ஆண் மாணவர்களுக்கு தனித்தனி கழிப்பறைகளை உறுதிசெய்ய வேண்டும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப கழிப்பறைகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
* மாதவிடாய் சுகாதார உரிமை என்பது அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும்.
* நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மட்கும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும்.
* பெண்களுக்கு கழிப்பறைகள் மற்றும் இலவச சுகாதார நாப்கின்களை வழங்கத் தவறினால், அரசே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
* தனியார் பள்ளிகள் இந்த வசதிகளை வழங்கத் தவறினால், அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
* இதுதொடர்பாக 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.