முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் உயிரிழப்பு
காரைக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுந்தரம் உயிரிழந்தார்.
காரைக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுந்தரம் உயிரிழந்தார். இவர் 1996-2001, 2006-2011 ஆண்டுகளில் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். சுந்தரம் தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில் காரில் இருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் பட்டு உயிரிழந்தார்.
சுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ப.சிதம்பரம், “மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு N சுந்தரம் அவர்கள் சற்று நேரத்திற்கு முன் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். நான் கடந்த இரண்டு நாட்களாகத் தொகுதியில் இருந்தேன். இன்று காலை புறப்பட்டு பகல் 2 மணிக்கு டில்லி வந்தேன். இந்த துயரச் செய்தி 3 மணிக்குக் கிடைத்தது. நம்முடைய கட்சித் தோழர்களை உடனடியாகச் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் சொல்ல வேண்டியுள்ளேன். திரு சுந்தரம் என்னுடைய 35 ஆண்டு காலத் தோழர். காங்கிரஸ் கட்சிப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். உடல் நலம் குன்றியதன் காரணமாகச் சில காலமாக ஓய்வில் இருந்தார். உடல் நலம் சீரடைந்து கட்சிப் பணிக்கு வருவார் என்று எதிர்பார்த்தேன். அவர் மறைவு அவருடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”