×

அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் ஜீரோ - ஜெயக்குமார் விமர்சனம்

 

அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் ஜீரோ எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதேபோல் அதிமுகவி இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பலறும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: கவுரவர்களின் சூழ்ச்சி எடுபடவில்லை, பாண்டவர்களான எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. மகிழ்ச்சியான தீர்ப்பு. அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது. அரசியலில் ஓ.பி.எஸ்-ன் எதிர்காலம் ஜீரோதான். ஓ.பி.எஸ்., சசிகலா, டிடிவி தினகரன் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை. அவர்கள் தவிர மற்றவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு கூறினார்.