வரலாற்றில் முதல்முறை! - கருணை கொலைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம் - தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதிகள் கண்ணீர்..!
உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத்தை சேர்ந்தவர் ஹரீஷ் ராணா (வயது 32). இவர் கடந்த 2013- ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். தங்கும் விடுதியில் தங்கி பயின்று வந்த ஹரிஷ் ராணா, 4-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அத்துடன், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அறுவைச் சிகிச்சையும் மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் கோமா நிலைக்கு சென்றார்.
அவரை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும், உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுமார் 13 ஆண்டுகளாக வீட்டிலேயே ஹரீஷ் ராணாவை வைத்து அவரது பெற்றோர் பராமரித்து வருகின்றனர். ஹரீஷ் ராணாவிற்கு உத்தரப்பிரதேச அரசு, மருத்துவர்கள், பிஸியோதெரபிஸ்ட்டுகளை வைத்து நாள்தோறும் அவரது வீட்டிற்கே சென்று சிகிச்சை அளித்து வந்தது.
இந்த நிலையில், தங்கள் மகனை இந்த சூழலில் பார்க்க நாங்கள் விரும்பவில்லை. அவர் மிகவும் அவதிப்படுகிறார். எனவே, அவரை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று ஹரீஷின் பெற்றோர் கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து, ஜனவரி 13-ம் தேதி ஹரீஷின் குடும்பத்தினரை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேரில் அழைத்துப் பேசினர். அப்போது அவரது குடும்பத்தினர், ஹரீஷ் நாள்தோறும் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை. அவர் படும் வேதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே அவரை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்திவாலா மற்றும் விஸ்வநாதன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கண்ணியமாக மரணமடைவதும் அடிப்படை உரிமை தான் என்று கூறி ஹரீஷ் ராணாவின் கருணை கொலைக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அப்போது நீதிபதிகள் இருவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
நாட்டிலேயே கருணை கொலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது இதுவை முதல்முறை. ஏற்கனவே, கடந்த 2018, 2023 ஆம் ஆண்டுகளில் ஹரீஷை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி இரண்டு முறை தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாகத் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஹரீஷுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையை உடனடியாக நிறுத்தப்பட்டு அவர் இயற்கையாக மரணிக்கவுள்ளார்.