முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை..!
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தஞ்சாவூரில் இருந்து சென்ற முதல்வர் ஸ்டாலின் வாகனத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சாலியமங்கலம் பகுதியில் சோதனை செய்தனர்.
தஞ்சாவூர் அடுத்த சாலியமங்கலம் அருகே முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தபோது அவரின் வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனைக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள அஞ்சுகம் அம்மையார் நினைவகத்தில் மரியாதை செலுத்தினார்.முதல்வர் வாகனத்தில் சில நிமிடங்கள் அதிகாரிகள் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
கடந்த சில தினங்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் செக்போஸ்ட் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சீமான் காரை மறித்துதேர்தல் பறக்கும்படையினர் சோதனையிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீமான், காரில் இருந்து இறங்கி, பெண் அதிகாரி சுப்புலட்சுமியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது இபிஎஸ், ஸ்டாலின் காரையும் சோதனை செய்ய வேண்டும் என்றார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.