×

அம்மா உணவகங்களில் இன்று முதல் விலையில்லா உணவு நிறுத்தம்!

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  தீவிரமடைந்த நிலையில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக  வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.  இந்த சூழலில் அம்மா உணவகத்தில் இந்த மழை முடியும் வரை இலவசமாக உணவு அளிக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மாநகராட்சி சார்பாக காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் அதற்கென்று இருக்கும் சமையல் கூடங்களில் சமைத்து, சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி போன்றவற்றை தயார் செய்து எங்கிருந்து மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் உணவு வழங்கப்பட்டு வந்தது.

அத்துடன் கடந்த 10 ஆம் தேதி முதல் தொடர் மழை காரணமாக அம்மா உணவகத்தில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டது. இதனால்  பலரும் அம்மா உணவகத்தை நாடி வந்து இலவச உணவை உண்டு நிம்மதி அடைந்தனர்.  தற்போது சென்னையில் மழை முற்றிலுமாக குறைந்துள்ளது.

இந்நிலையில் அம்மா உணவகங்களில் இன்று முதல் விலையில்லா உணவு நிறுத்தப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  கனமழை தொடங்கியது முதல் நேற்று வரை சுமார் 8 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்கள் மூலம் விலையின்றி உணவு வழங்கப்பட்ட நிலையில் இந்த சேவை இன்று முதல் நிறுத்தப்பட்டு, மீண்டும் பழைய விலைக்கே உணவு விற்பனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.