×

பட்டாசு கடை தீ விபத்தில் 6 பேர் பலி :  ஈபிஎஸ் இரங்கல்!!

 

 பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார்.  இந்த பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  தீயானது அருகிலுள்ள பேக்கரியிலும் தொடங்கியதால் அங்கிருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறின.  இதனால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் அதிகாலை வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  இந்த தீ விபத்தில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.  10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "கள்ளக்குறிச்சி,சங்கராபுரத்தில் தீபாவளி விற்பனைக்காக குடோனில் வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்த தீவிபத்தில்,அருகிலிருந்த பேக்கரியில் தீ பரவி சிலிண்டர்கள் வெடித்ததில்,  6 பேர் இறந்ததாகவும்,30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் அறிந்து மிகுந்த மன வேதனையும், துயரமும் அடைந்தேன். குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு,இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.வியாபார பெருமக்கள்  தீயணைப்புத்துறையின் விதிகளை முழுமையாக கடைபிடித்து விழிப்புடன் வியாபாரத்தில் ஈடுபடவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.