×

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!! 
 

 

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல் கிராமத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்தில் வேளாங்கண்ணிக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக செல்லும் வழியில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபாவாசத்திரம், மனோரா அருகில் இன்று அதிகாலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் திரு.பாக்கியராஜ் (வயது 62) த/பெ.யாகப்பதேவர், திருமதி.ஞானம்மாள் (வயது 60) க/பெ.அந்தோணி, திருமதி.ராணி (வயது 40) க/பெ. மாசாணம் மற்றும் திரு.சின்னபாண்டி (வயது 40), த/பெ. முருதையா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும்,  அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.