ரெண்டு வடைக்காக நாலு மணி நேரம் நடந்த சண்டை - வைரலாகும் வீடியோ
ரெண்டே ரெண்டு வடக்காக நாலு மணி நேரத்துக்கு மேலாக சண்டை நடந்துள்ளது. இருதரப்புக்கும் இடையே நடந்த இந்த கடும் மோதல் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோயம்புத்தூர் ஆவாரம்பாளையம் பகுதியில் அருணகிரி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் டீ வடை சாப்பிட்டு வருகிறார்கள். அதேபோல் அருகில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் டீ , வடை சப்ளை செய்வது வழக்கம் .
டீக்கடைக்கு அருகில் இருந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்து இரண்டு வடை வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். அதற்கு பணம் கொடுக்காத நிலையில் மீண்டும் அருணகிரி கடைக்கு வந்து வடை கேட்டிருக்கிறார், முன்பு சாப்பிட்ட வடைக்கு பணம் கொடுத்தால் தான் கொடுக்க முடியும் என்று அருணகிரி கறார் காட்ட, அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
அப்போது தகாத வார்த்தைகளில் பேசி விட்டதாக கூறி தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களையும் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு வந்து அருணகிரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அப்போது அருணகிரி மீது தகாத வார்த்தைகளில் அனைவரும் பேசி பிரச்சினை செய்திருக்கிறார்கள்.
இதைப்பார்த்த வாடிக்கையாளர் ஒருவர், பொது இடத்தில் ஏன் இப்படி அசிங்கமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று இருக்க சொல்லி இருதரப்பினரையும் சமாதானம் பேச முற்பட்டிருக்கிறார். இதனால் அந்த பெண் தரப்பினர் ஆத்திரமாகி சமாதானம் பேச வந்த அவரை சரமாரியாக அடித்து தாக்கியிருக்கிறார்கள். இதற்குள் விவரம் போலீசுக்கு செல்ல , போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் எச்சரித்து இனிமேல் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்படக்கூடாது என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
2 வடைக்காக 4 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சண்டையை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.