×

போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு! - மு.க.ஸ்டாலின்  சாடல்.. 

 


சமஸ்கிருதத்திற்கு கோடிகளில் பணம் ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, தமிழ் உள்ளிட்ட தென்மாநில மொழிகளுக்கு எந்த நிதியையும் ஒதுக்காமல் முதலைக்கண்ணீர் வடிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  

மொழிகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்து  ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மத்திய பாஜக அரசு , மொழி பாகுபாடு காட்டிவருவதாக  எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அதனை உறுதிபடுத்தும் விதமாக சமஸ்கிருத மொழியை  மேம்படுத்த மட்டும் மத்திய  அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.  2014-15 முதல் 2024-25 வரையிலான 10 ஆண்டுகளில்  சமஸ்கிருத மேம்பாட்டுக்கு ரூ.2,533 கோடியை  ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.  அதாவது   ஆண்டுக்கு ரூ.230 கோடி ஒதுக்க்ஈடு செய்யப்பட்டுள்ளது.  

2004ல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழைவிட 2005ல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  சமஸ்கிருத மொழிக்கு ஒவ்வொரு ஆண்டும்  ரூ.230 கோடியை அள்ளிக்கொடுத்த  ஒன்றிய அரசு ,  மற்ற செம்மொழிகளுக்கு கிள்ளிக்கொடுத்திருக்கிறது.  அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. 

தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளுக்கு ஒதுக்கிய நிதியை விட சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு அதிகமாக  ஒன்றிய அரசு  வழங்கியிருக்கிறது.  சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு வெறும் ரூ.147.56 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியிருப்பதும், சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய நிதியில் வெறும் 5% மட்டுமே மற்ற 5 மொழிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதும் ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.  

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமஸ்கிருந்தம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது. தமிழ் மற்றும் மற்ற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!” என்று குறிப்பிட்டுள்ளார்.