×

“கூட்டணி கட்சிகளின் அழுத்தங்களை விஜய் சுலபமாக சமாளித்துவிடுவார்”- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி

 

CMஆக பதவியேற்றது முதல் CM விஜய்யின் செயல்பாடுகளுக்கு நான் 100/100 மார்க் கொடுப்பேன் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி கூறியுள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி, “IAS, IPS அதிகாரிகள் இந்த கட்சிகளுக்கு வேண்டியவர் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள், உண்மையில் அப்படி கிடையாது. இதனால் அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அதுபோன்ற நிலை இப்போது இல்லை. முந்தைய ஆட்சியில் இருந்த அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. CMஆக பதவியேற்றது முதல் CM விஜய்யின் செயல்பாடுகளுக்கு நான் 100/100 மார்க் கொடுப்பேன். டாஸ்மாக் கடைகள் மூடல், சிங்கப்பெண் திட்டம் என மக்களுக்கு தேவையானதை முதலில் செய்துள்ளார். சிங்க பெண் திட்டம், போதைப்பொருள் தடுப்பு வரவேற்க வேண்டியவை, ஒரு பகுதியில் போதைப்பொருட்கள் விற்பது தெரிந்தால் சம்மந்தப்பட்ட காவல்நிலைய SHO (Station House Officer) மீது நடவடிக்கை என்ற நிலையை உருவாக்க வேண்டும். போதைப்பொருள் நிச்சயம் ஒழிக்க கூடியது தான்.. நான் பார்த்தவரை CM விஜய் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நினைக்கவில்லை, சட்டம், ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும், முந்தைய திட்டங்கள் தொடர வேண்டும், அன்றாடம் எந்த பிரச்னையும் இருக்க கூடாது, இது தான் மக்கள் எதிர்பார்ப்பது..


திமுக எதிர்ப்பு அலையை விட திமுக, அதிமுகவுக்கு ஒரு மாற்று வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். இது சைலண்ட் அலை தான். 1991ம் ஆண்டு தேர்தல் தான் ரியல் சுனாமி, திமுக வெறும் 2 தொகுதி தான் வென்றது. மக்களுக்கு தெரிந்தது விஜய் விசில் மட்டும் தான். இதை திராவிட கட்சிகள் கணிக்க தவறிவிட்டார்கள்.. ஊர் வாரியாக, மாவட்ட வாரியாக விஜய்க்கு ஒரு சைலண்ட் அலை இருந்தது. TVK Vs Anti-Incumbency என்று இருந்ததை 5ம் தேதியே எனது X தளத்தில் பகிர்ந்தேன். முன்னாள் காவல்துறை நண்பர்கள் மூலம் பூத் வாரியாக சர்வே எடுத்தோம். அப்படி தான் 121 தொகுதிகளை தவெக பிடிக்கும் என்று கூறினேன். இதற்கு 1977ல் எனது தந்தை ஒட்டன்சத்திரத்தில் MLA வேட்பாளராக போட்டியிட்ட போது கற்றுக்கொண்ட விஷயங்கள் எனக்கு உதவியது. கட்சி ஆரம்பித்து 2,3 வருடங்களில் ஆட்சியை பிடித்த விஜய் கூட்டணி கட்சிகளின் அழுத்தங்களை சுலபமாக சமாளித்துவிடுவார். TVK ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்ற விமர்சனத்தை சீரியஸாக எடுக்க தேவையில்லை, அது வெறும் அரசியல் விமர்சனம் தான்” என்றார்.