×

"பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு புறம்போக்கு"

 

தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையை விவரிக்கும் வகையில், துவங்கப்பட்ட இந்த மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் சென்னை, ஆதம்பாக்கம், ஏரிக்கரை தெருவில் தொடங்கி, ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் நிறைவடைந்தது. இந்த மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை ஆதம்பாக்கத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

பிரச்சாரப் பயணத்தின் போது, சாலையின் ஓரமாக அமைந்துள்ள கடைகள், சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு, பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளான, சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை காங்கிரஸ் தொண்டர்கள் வழங்கினர்.
 

நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "வேளாண் சட்டங்களை மோடி வாபஸ் பெற்றாலும் மீண்டும் அதனை கொண்டு வருவோம் என்று பாஜக மாநில தலைவர் பேசியுள்ளார். அவர் யாரென்று எனக்கு தெரியாது. அண்ணாமலையோ, சின்னமலையோ, திருவாண்ணாமலையோ.  எவ்வளவு பெரிய அயோக்கிய மனிதனாக இருந்தால் அண்ணாமலை இப்படி பேசுவார் என்று சிந்தித்து பாருங்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புறம்போக்கு, இப்படி பேசிகிறான். ஒழிக்கப்படவேண்டிய குரல் அது. வெள்ளத்தில் மக்களுக்கு நிவாரணம் என்று சொல்லிக்கொண்டு, தண்ணீர் கால் அளவு இருக்கும் இடத்திற்கு சென்று படகில் உட்கார்ந்து கொண்டு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார். இன்னொருவன் இருக்கிறான் அவன் கிரிமினல் குற்றவாளி எச்.ராஜா.

பிரதமரை மோடி என்று அழைப்பதைவிட கேடி என்று சொல்லலாம். நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு தற்போது கேள்வி குறியாக உள்ளது. இந்தியாவில் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். முதல்வர் ஸ்டாலினை பார்த்து குரைப்பவர்களும் சூரியனை பார்த்து குரைப்பவர்களும் ஒன்று தான். நகராட்சி தேர்தலிலும் நம்முடைய கூட்டணி மகத்தான வெற்றி பெறும்" எனக் கூறினார்.