தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி – தவெக தலைவர் விஜய்..!
அரசியல் விமர்சகர், அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளர் பொன்ராஜ் பேசிய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது அவர் தவெக பெண் தொண்டர்களை விபச்சாரிகள் என்று விமர்சித்து பேட்டி அளித்தார். அதற்கு தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்திற்கு தவெக தலைவர் விஜய்யும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “சிந்தனை எல்லாம் சாக்கடை, வார்த்தைகளில் எல்லாம் வன்ம நாற்றம். தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகள் குறித்து பொன்ராஜ் ஒரு பேட்டியில் வெளியிட்டிருக்கும் காழ்ப்புணர்வுக்கு வன்மையான கண்டனங்கள்.
ஒட்டுமொத்த பெண்ணினத்தையே கொச்சைப்படுத்தும் இவர்தான் சமூக நீதி பற்றியும், கல்வி பற்றியும் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார் என்பது வெட்கக்கேடு. அகிலம் போற்றும் அப்துல் கலாமிடமிருந்து இவர் கற்றுக் கொண்டது என்ன? அவர் பெயரை வைத்து இவர் அடைந்தது என்ன?
திமுக விட்டெறியும் சில்லரைகளுக்காக வரம்பு மீறி பேசியது பற்றி பலர் சுட்டிக்காட்டியும் இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பது இறுமாப்பின் உச்சநிலை. ஐயா அப்துல் கலாமின் ஆத்மா நிச்சயம் உங்களை மன்னிக்காது. இப்பொழுதாவது உங்கள் தவறை உணர்ந்து தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கோரி இனி வரும் காலங்களில் சில்லரைகளுக்கு விலை போகாமல் கௌரவமாக வாழ பாருங்கள். இல்லையேல் சமுதாயத்தில் கீழ்த்தரமான எடுத்துக்காட்டுகளில் ஒருவராகத் தான் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுவீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தவெக தலைவர் விஜய், “இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.
தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.