ஒவ்வொரு தம்பதியும் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் - சந்திரபாபு நாயுடு..!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்கள் தொகை குறித்து கூறியதாவது; 30 ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினேன்.
10 ஆண்டுகளில் அந்த இலக்கை அடைந்து வெற்றி கண்டோம். தற்போது தென்னிந்தியாவில் நாம் ஒரு சிக்கலை எதிர்கொண்டு வருகிறோம். இந்தியா மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளிலும் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை தொகை அதிகரித்து வருகிறது. ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையினால் சீனா மக்கள் தொகை குறைவைச் சந்தித்து வருகிறது.
இப்போது நான் மக்கள் தொகை மேலாண்மையை ஊக்குவித்து வருகிறேன். ஒவ்வொரு தம்பதியினரும் குறைந்தது இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும். முன்பு, ஒன்று நல்லது இரண்டு குழந்தைகள் போதுமானது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தேன். ஆனால், இப்போது குறைந்தது இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.
அதேவேளையில், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்வதை வரவேற்கிறேன், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.