×

இ.பி.எஸ். தனித்துதான் ஆட்சி அமைப்பார்: தம்பிதுரை உறுதி..

 

அ.தி.மு.க. மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசியதாவது, "சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தமிழக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார். டாஸ்மாக் மதுபான முறைகேட்டில் ரூ. 1 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. சாதாரணமாக யார் குற்றம் சாட்டினாலும் அவர்கள் மீது வழக்கு தொடுக்கும் ஸ்டாலின் அரசு, அமித் ஷா மீது வழக்கு தொடுக்குமா? அந்த தைரியம் ஸ்டாலினுக்கு உண்டா?


எடப்பாடி பழனிசாமி சரியான கூட்டணியை அமைத்திருக்கிறார். வக்பு மசோதா வருவதற்கு முன்பே, எடப்பாடி பழனிசாயி அமித் ஷாவைச் சந்தித்தார். அ.தி.மு.க. எப்போதும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சி என்பதை எடுத்துக் கூறினார்.  இதன் காரணமாகவே, அ.தி.மு.க. எம்பிக்கள் 4 பேரும் வக்பு மசோதாவை எதிர்த்து வாக்களித்தோம். இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு, நோன்பு நோட்பதற்கு என பல்வேறு சலுகைகளை இஸ்லாமியர்களுக்குக் கொடுத்தது அ.தி.மு.க. தான். இஸ்லாமிய மக்களுக்கு இது தெரியும்.  

1952 முதல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. ராஜாஜி காலம் முதல் இதுவரை கூட்டணி ஆட்சி இருந்தது கிடையாது. தனிப்பெரும்பான்மை இல்லாதபோதும் ராஜாஜியும், கருணாநிதியும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. 2006-ல் ஒரு நிலைமை ஏற்பட்டது. தி.மு.க.வுக்கு 93 சீட்டுதான். பிரணாப் முகர்ஜி அப்போது இங்கு வந்தார். கூட்டணி ஆட்சி கேட்டார். கருணாநிதி ஒப்புக்கொள்ளவில்லை. அதேநிலைதான், தற்போதும். 2026ல் எடப்பாடி பழனிசாமி தனித்தேதான் ஆட்சி அமைப்பாரே தவிர, கூட்டணி ஆட்சி கிடையாது" என தெரிவித்துள்ளார்.