×

QR கோடு அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியது தேர்தல் ஆணையம்..!

 

தமிழகத்துடன் சேர்த்து நம் அண்டை மாநிலமான கேரளா, யூனியன் பிரதேசமான புதுச்சேரி, வடகிழக்கு மாநிலமான அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் க்யூ.ஆர்., கோடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் கமிஷன் நேற்று அறிமுகம் செய்தது. இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:வரும் 4ம் தேதி, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வரும் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு க்யூ.ஆர்.கோடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் அதிகாரப்பூர்வ நபர்களின் அடையாளத்தை உறுதி செய்ய மூன்று அடுக்கு பாதுகாப்பு முறை பின்பற்றப்படும். முதல் மற்றும் இரண்டாம் அடுக்கில், தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பாதுகாப்பு படையினர் நேரடியாக சரிபார்ப்பர்.

ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அறையின் மிக அருகே உள்ள மூன்றாம் அடுக்கில், க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே, உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும். தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த க்யூ.ஆர்., கோடு அடங்கிய அடையாள அட்டை வழங்கப்படும். அதாவது தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள், ஓட்டு எண்ணும் ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணும் ஏஜன்டுகள் ஆகியோருக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்படும்.

செய்தியாளர்கள் வசதிக்காக, ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு அருகே ஊடக மையங்கள் அமைக்கப்படும். தேர்தல் கமிஷன் வழங்கிய அதிகாரப்பூர்வ கடிதம் வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கு வழக்கம் போல அனுமதி தரப்படும். ஓட்டு எண்ணிக்கை நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மிக உயர்ந்த தரத்தில் உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் அனைத்து லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் இந்த முறை கட்டாயம் பின்பற்றப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முறையை செயல்படுத்த உரிய பயிற்சி பெற்ற பணியாளர்களை நியமிக்கவும்,எந்த தடையும் இல்லாமல், இந்த நடைமுறையை அமல்படுத்தவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில தலைமை தேர்தல் கமிஷனர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.