சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக தேர்தல் ஆணையம் ரூ. 1,032 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலை நடத்துவதற்காக 1302 கோடி தேர்தல் ஆணையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக 1,032 கோடி ரூபாய் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். மேலும், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு 795 ரூபாயும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு 1,009 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டதாகவும், இந்த முறை கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல், பதற்றமான மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 5,938 வாக்கு சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவம், நுண் பார்வையாளர்கள், கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்கப்படும் என கூறிய அவர், அதிக வெப்பம் காரணமாக வாக்குப்பதிவின் போது, மையங்களில் வாக்காளர்களுக்கு பந்தல் மற்றும் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 43,220 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையிக், சி விஜில் செயலி மூலமாக 2,600 புகார்கள் பெறப்பட்டு, அதில் 2,364 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 462 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதில், 182 கோடி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 279 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தேர்தல் பணிக்காக வரும் 13ம் தேதிக்குள் துணை ராணுவ படையினர் தமிழகம் வந்தடைவார்கள் என கூறிய அவர், 85 வயதிற்கு மேற்பட்ட 2.5 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்குக்காக பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.