×


3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை

 

கரூரில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்து கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் கணபதி (61). இவர் அவரது வீட்டில் அவ்வப்போது பூஜைகள் நடத்துவது வழக்கம். அதே பகுதியில் தந்தையை இழந்த 10, 12, 13 வயதுடைய 3 சிறுமிகள் தாயின் பராமரிப்பில் இருந்துள்ளனர். கணபதி நடத்தும் பூஜைகளுக்கு சிறுமிகள் 3 பேரும் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமிகள் 3 பேரையும் கணபதி தனித்தனியே வரச்சொல்லி தீர்த்தம், பொங்கல் ஆகியவற்றை கொடுத்து அச்சிறுமிகளுக்கு தனித்தனியே பாலியல் துன்புறுத்தல்கள் பலமுறை அளித்துள்ளார். இதுகுறித்து 3 சிறுமிகளும் தாயிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமிகளின் தாய் வெங்கமேடு போலீஸில் கடந்த 2019ம் ஆண்டு புகார் அளித்தார். இதையடுத்து குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை, ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய 4 சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் கணபதியை கைது செய்தனர்.     

கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி நசீமாபானு இன்று வழங்கிய தீர்ப்பில், கணபதிக்கு 25 ஆண்டுகள் தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.