×

எடப்பாடி பழனிசாமி மூன்றாம் தர பேச்சாளர் போல பேசக்கூடாது - பிரேமலதா விஜயகாந்த்..! 

 

சேலம் தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்,

"திமுக தேர்தல் அறிக்கைதான் இந்த சட்டமன்ற தேர்தலின் சூப்பர் ஸ்டார். அந்த அறிக்கைக்கு செல்லும் இடமெல்லாம் நல்ல வரவேற்பு இருக்கிறது. நிச்சயம் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வர் ஆவார்" என்றார்.

கடலூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "கடலூர் பரப்புரை கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அன்று இரவே என்னிடம் விசிக தலைவர் திருமாவளவன் தொலைபேசியில் விளக்கம் அளித்து விட்டார். பரப்பரை கூட்டத்தில் வேட்பாளர்களை முதலமைச்சர் அறிவிப்பது தான் அரசியல் மாண்பு. இது குறித்து ஊடகங்கள் பெரிதுபடுத்தி விட்டன" என்றார்.

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூன்றாம் தர பேச்சாளர் போல பேசக்கூடாது. அவர் முதலமைச்சர் வேட்பாளர் என்பதால் அதற்கேற்ற மாதிரி பேச வேண்டும் என்று கூறியிருந்தேன். அதன் பிறகு அவர் பேசுவதை நிறுத்திவிட்டார். தேமுதிகவை பொறுத்தவரை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி. முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இந்த சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கியுள்ளோம்" என்றார்.