×

பை இல்லாத, தரமற்ற பொங்கல் பரிசு! திமுகவை விமர்சித்ததால் ராஜேந்திர பாலாஜி கைது- ஈபிஎஸ்

 

பொங்கல் பரிசு தொகுப்பினை துணி பையுடன்  முழுமையாக  வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக  கட்சி அலுவலகத்தில்  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  அப்போது , சேலம் வடக்கு மாவட்ட பாமக முன்னாள் செயலாளர்  சாம்ராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 21 பொருட்கள் தருவதாக அறிவித்துள்ள அரசு,  21 பொருட்களையும்  முழுமையாக வழங்கவில்லை. பல இடங்களில் 18 பொருள்கள்,  19 பொருட்கள்  மட்டுமே வழங்கப்படுகிறது. துணிப்பை தருவதாக கூறிவிட்டு, பை  வழங்கவில்லை,  அது  பின்னர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.  பொங்கல் பரிசு தொகுப்பினை  எடுத்துச் செல்வதற்கு  கட்டைப்  பையை வீட்டிலிருந்து எடுத்து வரும்படி கூறி உள்ளனர். பொருட்கள் வாங்கி சென்ற பின்னர் பை வழங்குவது எதற்கு?  பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற வெல்லத்தை  வழங்குகின்றனர். திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் இரண்டரை டன் வெல்லத்தை  தரமற்ற வெல்லம் என பறிமுதல் செய்துள்ளனர். இதிலிருந்தே தரமற்ற வெல்லம் வழங்குவது தெரியவந்துள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்பட்டும் வருகிறது.  தமிழக அரசு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில்  பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று அறிவித்து அதற்கு அபராதமும் விதித்தோம். ஏற்கனவே நாங்கள் கொண்டுவந்த பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை  மீண்டும் கொண்டு வந்து விளம்பரத்துக்காக செயல்படுகிறார்கள்.

மேலும் வடமாநிலத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை கமிசனுக்கு வாங்கி வந்து,  பொதுமக்களுக்கு தரமற்ற முறையில் வினியோகிக்கப்படுகிறது. கரும்பு வழங்குவதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. தரமான கரும்புகளை வழங்க வேண்டும். துணி பையிலும் ஊழல் நடந்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு  வேட்டி, சேலை பொங்கல் பண்டிகையில் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வேட்டி, சேலை வழங்கப்படவில்லை என்றார். ராஜேந்திர பாலாஜி மீதான பொய் வழக்கு   போடப்பட்டு உள்ளது.கடந்த ஆட்சியில் ஸ்டாலினைப் பற்றி காட்டமாக விமர்சித்திருந்தார். அதனால் அவர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளனர்.  திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் காவல்துறையினரை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் 

தமிழக அரசு கொரோனா பரவலை சரியான வழியில் தடுக்க தவறிவிட்டது.கொரோனா பாதுகாப்புக்கு ஏற்கனவே வாங்கிய உபகரணங்களை தான் இப்போது பயன்படுத்தி வருகிறார்கள். அதிமுக அரசின் ஆலோசனைகளை கடைப்பிடித்திருந்தால்  கொரோனா பாதிப்பு இவ்வளவு வந்திருக்காது. தமிழக அரசு எல்லாவற்றிற்கும் குழுக்கள் மட்டுமே அமைத்து உள்ளனர்.  ஆனால் செயல்பாடுகள் இல்லை. திறமை இல்லாத அரசாங்கமாக திமுக அரசாங்கம் உள்ளது” எனக் கூறினார்.