காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சி கண்டித்தக்கது - எடப்பாடி பழனிசாமி..!
மேகதாது அணை திட்ட தனித் தீர்மானம் மீதான விவாத்ததில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த அதிமுக பலமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 24.4.2015இல், மேகதாது திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தக்கோரி மத்திய அரசிடம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் வழங்கினார். பிறகு அதே ஆண்டில் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தக்கூடாது என மீண்டும் வலியுறுத்தினார்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரமும் உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும். அணை கட்டினால் நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் கர்நாடகா மாநிலம் நீரை முழுவதுமாக பயன்படுத்திவிடும். எனவே நாம் முதலமைச்சராக இருந்தபோதும் மேகதாது அணையை கட்டக்கூடாது என பிரதமரை வலியுறுத்தினேன். நாம் எப்போதும் போராடி போராடியே காவிரி நீரை பெற்று வருகிறோம். காவிரி ஆற்றின் மீது நமக்குரிய உரிமையை பேணி காப்பது நம் அனைவரது உரிமையாகும். அதிமுக சார்பில் முதலமைச்சர் கொண்டுவந்த அரசின் தனி தீர்மானத்தை ஒருமனதாக ஆதரிக்கிறோம்” என்று ஆதரவு தெரிவித்தார்.