டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி; தமிழகம் முழுவதும் உஷார் நிலை..!
டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லியில் நடந்த துயரமான கார் வெடிப்புச் சம்பவத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் இதயம் இரங்குகிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், பயணிகள் பெயரில் ஊடுருவல் ஏதும் நடக்கின்றதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூட கூடிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.