“ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும்”- காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றம்
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக வெற்றிப் பெற்றால் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்றும், அதை தங்கள் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி பொறுப்புகளில் காங்கிரசுக்கு கூட்டணிக் கட்சி என்கிற முறையில் 30% பங்கு தர வேண்டும் என்றும், கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட கூடுதலாக இந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு திமுக தொகுதிகள் ஒதுக்குவதை தேசிய தலைமை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல் திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டு பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜவாஹிருல்லா தலைமையில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட மமக, இம்முறை 5 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.