அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க உத்தரவிட்ட துபாய் இளவரசர்..!!
துபாயின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், துபாய் அரசு ஊழியர்களின் சம்பளத்தை மார்ச் 17 ஆம் தேதி ஈத் அல் ஃபித்ருக்கு முன்னதாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனால் ஊழியர்கள் தங்கள் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, வரவிருக்கும் விடுமுறையின் மகிழ்ச்சியில் பங்கு பெறலாம் என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகமானது பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு ஈத் அல் பித்ரைக் குறிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ விடுமுறை ஏற்பாடுகளை அறிவித்துள்ளதால் இந்த உத்தரவு வந்துள்ளது.
இதன்படி அனைத்து மத்திய அமைச்சகங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மார்ச் 19 முதல் 22 வரை விடுமுறையைக் கடைப்பிடிக்கும் என்றும், மார்ச் 23 அன்று அதிகாரப்பூர்வ வேலை நேரம் மீண்டும் தொடங்கும் என்றும் அரசாங்க மனிதவளத்திற்கான கூட்டாட்சி ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கு, விடுமுறை மார்ச் 19 முதல் 21 வரை நீடிக்கும். ரமலான் 30 நாட்கள் நீடித்தால், தனியார் துறை விடுமுறை மார்ச் 22 ஐ உள்ளடக்கியதாக நீட்டிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ பொது விடுமுறை நாட்காட்டியின்படி, ஷவ்வால் 1 முதல் 3 வரை ஈத் அல் பித்ர் கொண்டாடப்படுகின்றது மற்றும் இந்த நாட்கள் பொது விடுமுறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
துபாயின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (IACAD) 2026 ஆம் ஆண்டு ஈத் அல் பித்ர் மார்ச் 20 ஆம் தேதி வந்து மார்ச் 22 வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இறுதி தேதிகள் ஷவ்வால் பிறை பார்வையைப் பொறுத்தது ஆகும்.
ஷவ்வால் மாதத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தை தீர்மானிக்க ரமலான் 29 ஆம் தேதி பிறை பார்க்கும் குழுக்கள் கூடும். மார்ச் 18 ஆம் தேதி பிறை தென்பட்டால், ஈத் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கும் பிறை தென்படாவிட்டால் மார்ச் 20 ம் தேதி ஈத் அல் ஃபிதர் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.