பில்லைத் தவிர்க்க வெஜ்பிரியாணியில் எலும்புத்துண்டு போட்டு நாடகம்..! சிக்கியது எப்படி ?
கோரக்பூரில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் 8 முதல் 10 பேர் கொண்ட ஒரு குழு உணவகத்திற்குச் சென்று வெஜ் பிரியாணி மற்றும் அசைவ பிரியாணியை ஆர்டர் செய்துள்ளது. அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவர்களில் ஒருவர் தனது வெஜ் பிரியாணியில் எலும்பு இருப்பதாகக் கத்தி கூச்சலிட்டுள்ளார் .
தங்களது சமையலறையில் சைவ மற்றும் அசைவ உணவுகள் தனித்தனியாக சமைக்கப்படுவதால் இப்படி ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என உணவக உரிமையாளர் கூறினார். இதனை மறுத்த அந்த இளைஞர்கள் கூட்டம், தொடர்ந்து கூச்சலிட்டனர். விஷயம் பெரிதாகி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இளைஞர்கள் வேண்டுமென்றே நாடகமாடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
இது குறித்து காவல்துறையிடம் தெரிவித்த உணவக உரிமையாளர் ரவிகர் சிங் "அவர்கள் ₹ 5,000-6,000 வரையிலான பில் தொகையை செலுத்துவதைத் தவிர்க்க விரும்பியுள்ளனர். அவர்களின் செயல்கள் முற்றிலும் வேண்டுமென்றே செய்யப்பட்டவை" என விளக்கம் அளித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.