ரயில் பயணிகளுக்கு டபுள் ஜாக்பாட்..! – தமிழகத்திலிருந்து மங்களூருவுக்கு 2 புதிய ரயில்கள்..!
தமிழகத்தில் இருந்து கேரளா வழியாக கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு 2 புதிய ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதாவது பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 11) திருச்சியில் நடைபெற்ற விழாவில் திருநெல்வேலி - மங்களூரு இடையேயான புதிய வாராந்திர விரைவு ரயில் சேவையையும், ராமேஸ்வரம் - மங்களூரு இடையேயான புதிய வாராந்திர விரைவு ரயில் சேவையையும் தொடங்கி வைத்துள்ளார்.
நெல்லையில் இருந்து மங்களூருவுக்கு நேரடி ரயில் சேவை இல்லை. இது தொடர்பாக மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ரயில்வே துறை செவிசாய்த்துள்ளது. இந்த ரயிலின் அட்டவணையை பொறுத்தவரை திருநெல்வேலி - மங்களூரு ஜங்ஷன் வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண்: 16708) புதன்கிழமை திருநெல்வேலியில் இருந்து மாலை 3:45 மணிக்கு புறப்படும். அடுத்த நாள் (வியாழன்) காலை 6:55 மணிக்கு மங்களூரு சந்திப்பு ரயில் நிலையம் சென்றடையும்.
மறுமார்க்கமாக இந்த ரயில் வாரந்தோறும் வியாழக்கிழமை மங்களூருவில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்படும். அடுத்த நாள் (வெள்ளி) அதிகாலை 3:30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். இந்த ரயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, ஷொரனூர், திரூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு வழியாக மங்களூரு சென்றடையும்.
இதேபோல் ராமேஸ்வரம் - மங்களூரு சென்ட்ரல் (வண்டி எண்: 16703) ராமேஸ்வரத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மங்களூரு சென்ட்ரலுக்கு காலை 6:55 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் மதுரை, பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் கோழிக்கோடு வழியாக இயக்கப்படுகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு ராமேஸ்வரத்திலிருந்து கர்நாடகாவிற்கு நேரடி ரயில் வசதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.