"யாரிடமும் சொல்லக் கூடாது!" – மிரட்டிய தலைமை ஆசிரியர்... தைரியமாக புகார் அளித்த எட்டாம் வகுப்பு மாணவி!
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் பள்ளிவிடை, மாடகுடி, சாத்தம்பாடி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியராக ஜெயராஜ் என்பவர் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, பள்ளி மாணவிகளிடம் அவர் வரம்பு மீறி நடக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
தனது அலுவலக அறைக்கு மாணவிகளை வரச் சொல்லி, பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை அவரை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிகிறது. தலைமை ஆசிரியர் என்பதால் அச்சமடைந்த மாணவிகள், இதுகுறித்து வெளியே சொல்ல பயந்து அமைதி காத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்மையில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை தனது அறைக்கு வரவழைத்த தலைமை ஆசிரியர் ஜெயராஜ், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். மேலும், இதை பற்றி யாரிடமும் கூறக்கூடாது எனவும் அவர் மிரட்டியதாக தெரிகிறது.
ஆனால், அவரது மிரட்டலுக்கு பயப்படாத அந்த மாணவி, வீட்டிற்கு வந்து பள்ளியில் நடந்த விஷயத்தை பற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அப்பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியரை உடனடியாக கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். மக்கள் திரண்டு நிற்பதை பார்த்த தலைமை ஆசிரியர் ஜெயராஜ், அச்சத்தில் பள்ளியின் பின்புற வாசல் வழியாக தப்பியோடினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமை ஆசிரியர் ஜெயராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.