×

இனி தாலுகா ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்! 30 நாட்களில் கைக்கு வரும் பட்டா..!!

 

தமிழகத்தில் வீடு, மனை, விவசாய நிலம் போன்ற சொத்துக்களை வாங்குபவர்கள், பத்திரப்பதிவு முடிந்ததும் தங்களது பெயருக்குப் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கின்றனர். பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் பொருட்டு, 'இ-சேவை' மையங்கள் வாயிலாக இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அமலில் உள்ளது.

இவ்வாறு இ-சேவை மையங்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு (VAO) ஆன்லைன் வாயிலாகவே அனுப்பப்படும். அங்கு நிலத்தை மீண்டும் அளந்து, புதிய உட்பிரிவு எண் உருவாக்க வேண்டிய தேவையுள்ள விண்ணப்பங்கள், நில அளவையர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இதுவரை நில அளவையர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றாலும், நிலத்தை அளந்த பின் அது தொடர்பான கள ஆய்வு அறிக்கை, வரைபடம் தயாரிப்பு போன்ற பணிகளை 'மேனுவல்' (கையாலெழுதும்) முறையில் காகித ஆவணங்களாகவே மேற்கொண்டு வந்தனர். அதன் பின்னரே அவை மீண்டும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு வந்தன.

இந்த இரட்டை வேலை காரணமாகவும், மேனுவல் நடைமுறையாலும் பட்டா மாறுதல் பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, தற்போது நிலத்தை அளந்து அது தொடர்பான குறிப்புகளை எழுதுதல், வரைபடம் அளித்தல் போன்ற பணிகளை 'மேனுவல்' முறையில் மேற்கொள்வதை முற்றிலும் நிறுத்த நில அளவைத்துறை உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவு, புதிய பட்டா உருவாக்கம், நில அளவை வரைபடம் உருவாக்கம் என அனைத்துப் பணிகளும் தற்போது முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து நில அளவைத்துறை அதிகாரி ஒருவர் விளக்கியபோது:

"உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் பணிகளை விரைவுபடுத்த, வருவாய்த்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மனுக்கள் மீதான ஆய்வு மற்றும் துறை ரீதியான குறிப்புகள் எழுதுதல் போன்ற பணிகளை ஆன்லைன் முறையிலேயே மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது."

இந்த புதிய உத்தரவின்படி, அனைத்து நில அளவையர்களும் தங்களுக்குத் துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளைப் (Laptops) பயன்படுத்தி, ஆன்லைன் முறையில் மட்டுமே தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கேற்ப, அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றன.

நில அளவைத்துறையின் இந்த அதிரடி டிஜிட்டல் மாற்றத்தால், பொதுமக்கள் தங்களது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் உத்தரவை, விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் எவ்வித தாமதமுமின்றி ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை, பட்டா மாறுதலில் நிலவி வந்த காலதாமதத்திற்கும், முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.