×

பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க வேண்டாம்! போக்குவரத்து கழகம் அறிவிப்பு

 

வரும் செவ்வாய் கிழமை முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்  திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட பேருந்துகளில் பொதுமக்கள் பயணச்சீட்டு வாங்குவதற்காக 2000 ரூபாய் நோட்டு தாள்களை வழங்கினால் நடத்துனர்கள் அதனை வாங்க கூடாது என்று போக்குவரத்து மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,இந்திய ரிசர்வ் வங்கி 19.05.2023 தேதி வெளியிட்ட  அறிக்கையில் ரூபாய் 2000 இந்திய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் முடிவை அறிவித்துள்ளது. இருப்பினும் ரூபாய் 2000 இந்திய நோட்டுகள் சட்டபூர்வமான டெண்டராக இருக்கும், மேலும் 30 செப்டம்பர் 2023 தேதி வரை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.20,000 வரை வங்கியில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன் காரணமாக 2000 ரூபாய் நோட்டுகளை கழகத்தால் வங்கியில் செலுத்த இயலாத நிலை உள்ளதால், 23.06.2023 ஆம் தேதி முதல் நடத்துனர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் பக்குவமாக எடுத்துரைத்து 2000 ரூபாய் நோட்டுகளை வழித்தடத்தில் வாங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வசூல் தொகையை பிறரிடம் மாற்றம் செய்வதையும் தவிர்க்கும்படி தகுந்த அறிவுரை வழங்குமாறு பொது மேலாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தினசரி ஒவ்வொரு கிளையிலும் நடத்துனர்களால் செலுத்தப்பட்ட வசூல் தொகையில் 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் மண்டல கணக்கு பிரிவு வாயிலாக மத்திய கணக்கு பிரிவிற்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.