பொய் செய்திகளை நம்பாதீங்க..! ஆதிதிராவிடர் நல நிதி குறித்து பரவிய செய்திக்கு அரசு முற்றுப்புள்ளி..!
தமிழகத்தில் மகளிருக்கு வழங்கப்படும் உரிமை தொகைக்காக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளது என, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன் விபரம்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு மாற்றப்படவில்லை. அரசின் வரவு,செலவு திட்ட விதிமுறையின்படி, ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்படும் மொத்த நிதிக்குள், 'பொது, ஆதி திராவிடர், பழங்குடியினர்' என, தனித்தனி கணக்கு தலைப்புகளில் குறிப்பிடப்படுகின்றன.
இந்த நடைமுறை, மகளிர் உரிமைத் தொகை உட்பட, அனைத்து தனிநபர் பயனாளி சார்ந்த திட்டங்களிலும் பின்பற்றப்படுகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதி, அந்த சமூக பயனாளிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அந்த நிதியை, வேறு சமூகங்களுக்கோ அல்லது வேறு நோக்கங்களுக்கோ பயன்படுத்த முடியாது. அந்த வகையில், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு, தனி தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள, ஆதி திராவிடர், பழங்குடியினர் திட்டங்களுக்கான நிதியில் இருந்து பணம் எடுக்கப்படவில்லை. எனவே, நிதி மாற்றம் நடந்ததாக கூறுவது தவறானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.